Nayathara: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ராதிகா! உடனே நயன்தாரா செய்த சம்பவம்

radhika

 

கடந்த மாதம் 27 ஆம் தேதி ராதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தாய்க்கிழவி. பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடி. ஆனால் 75 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த படம் வசூல் சாதனை படைத்தது. இதனுடைய கதைக்களம் என்னவெனில் ஒரு தைரியமான கிராமத்து தாயாக பவுனுதாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருப்பார். உசிலம்பட்டி பின்னணியில் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தது.

வயதான கெட்டப்:

radhika

படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை இயக்கினார். வரும் 26 ஆம் தேதி இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. முதலில் இந்த படத்தில் ராதிகா நடிக்க மிகவும் தயங்கி இருக்கிறார். அதற்கு காரணம் அந்தப் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கெட்டப். மிகவும் வயதான தோற்றம் என்பதால் ஆரம்பத்தில் யோசித்த ராதிகாவை சரத்குமார் தான் கன்வின்ஸ் செய்து அதில் நடிக்க வைத்ததாக தெரிகிறது.

ஆனால் இந்தப் படத்திற்கான வரவேற்பு அதன் வெற்றி ராதிகாவை ஒரு பெரிய அந்தஸ்தில் இப்போது உட்கார வைத்திருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை இப்போது வரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தியேட்டரில் பார்த்தவர்கள் அடுத்து ஓடிடி தளத்தில் பார்க்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த படம் பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமாரின் வேதனை:

ஏற்கனவே தன்னுடைய மனைவியான ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் சரத்குமார் இருக்கிறார். ராதிகாவின் கெரியரில் எவ்வளவோ பல நல்ல கேரக்டர்களில் நடித்திருக்கிறார். சாவித்ரிக்கு பிறகு நடிப்பில் இளவரசி என்றால் அது ராதிகாதான். குறிப்பாக கிழக்கு சீமையிலே படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

radhika

பாசமுள்ள அண்ணனுக்கும் தன்னுடைய கணவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அவருடைய கதாபாத்திரம் சாதாரணமானவர்களை கூட அழ வைத்துவிடும். கடைசியில் அவரின் மரணம் அனைவரையும் அழ வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு படத்திலேயும் ராதிகாவின் கேரக்டரை பற்றி பேசிக் கொண்டே போகலாம். ஆனால் இதுவரை ஒரு தேசிய விருது கூட ராதிகா வாங்கவில்லை என்பதுதான் வேதனை. தாய்கிழவி படத்தின் மூலம் அதுவும் நிறைவேறும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தயங்கிய ராதிகா:

அம்மா கேரக்டர், அக்கா கேரக்டரிலேயே நடித்து வந்த ராதிகா இந்த படத்தில் ஒரு பாட்டி கேரக்டரில் நடித்திருந்தது அனைவருக்குமான ஒரு ஆச்சரியம். இதுவரை எந்த ஒரு பெரிய விருதையும் வாங்காத ராதிகாவுக்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சினிமா துறையில் ராதிகா நுழைந்து 49 வருடங்கள் ஆகி இருக்கின்றன.

இதைக் கொண்டாடும் விதமாக தற்போது ராதிகா நடித்து வரும் ஹாய் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் ராதிகாவுக்காக நயன்தாரா அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்திருந்தார்.  நயன்தாராவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த பட யூனிட்டும் கேக் கட்டிங் ஏற்பாடு செய்து நயன்தாராவும் அவரை கட்டியணைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அரசியல் பிரவேசம்:

ராதிகாவை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் திமுக கட்சியில் இருந்தார். அதன் பிறகு தன் கணவருடன் அதிமுகவில் இணைந்தார். சரத்குமார் தனியாக சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க அந்த கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைய விருதுநகர் தொகுதியில் ராதிகா வேட்பாளராக போட்டியிட்டார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன் மனைவியோ அல்லது நானோ எந்த தொகுதியிலும் போட்டியிட போவதில்லை என்று அறிவித்திருகிறார் சரத்குமார். ஏனெனில் பாஜகவில் தனக்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட சரத்குமார் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால் மீண்டும் தன்னுடைய கட்சியை மீட்டெடுக்கும் விதமாக தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாழ்க்கையிலும் சரி அரசியலிலும் சரி சரத்குமாருக்கு ஒரு பக்கபலமாக இருந்து வருகிறார் ராதிகா.

ராதிகாவின் upcoming மெகா படங்கள்:

radhika

ராதிகா தற்போது பெரிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஏற்கனவே விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நயன்தாராவுடன் இணைந்து ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ராதிகா நடித்துள்ளார்.

அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இன்னும் ரிலீசாகாத திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்திலும் ராதிகா ஒரு முக்கியமான ஸ்பை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் ஒரு கௌரவமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மா, பாட்டி போன்ற வழக்கமான கதாபாத்திரங்களை தாண்டி கதையின் நாயகியாக தாய்க்கிழவி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. அதனால் இனிமேல் கதையின் நாயகியாக அவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகாவை கண்டெடுத்த பாரதிராஜா:

பாரதிராஜா அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. அந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அவருடைய இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியானது கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தின் மூலமாகத்தான் ராதிகா தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இந்த படத்திற்காக கதாநாயகியை தேடிக் கொண்டிருந்த பாரதிராஜா கண்ணில் ராதிகா என்ற ஒரு மிகப்பெரிய நடிகை பட்டார்.

அதன் பின்னணி கதை என்ன என்பது அனைவருக்குமே தெரியும். அவருடைய அறிமுகம் தான் இன்று நான் இந்த அளவு ஒரு பெரிய உச்சத்தில் இருப்பதற்கு காரணம் என எல்லா மேடைகளிலும் ராதிகா பாரதிராஜாவை பற்றி பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். தாய்க்கிழவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இந்தப் படத்தை பாரதிராஜா பார்க்கவில்லையே என்பது எனக்குள் இருக்கும் மிகப்பெரிய வருத்தம். இருந்தாலும் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் இந்த படத்தை அவருக்கு நான் போட்டு காட்டுவேன் என கூறியிருந்தார்.

சர்ப்ரைஸ் செய்த நயன்தாரா: 

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் நடித்து வரும் திரைப்படம் ஹாய். இந்த படத்தில் ராதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது ராதிகாவை பாராட்டி சரத்குமார் சில விஷயங்களை பேசி இருந்தார். அதுவும் தாய் கிழவி படத்தின் வெற்றிக்கு பிறகு ராதிகாவின் நடிப்பை பார்த்து லேடி சூப்பர் ஸ்டார் என ராதிகாவை புகழ்ந்துள்ளார்.

நயன்தாராவுக்கு முன்பே இந்த இடத்தை ராதிகா பிடித்துவிட்டார் என்றும் கலகலப்பாக பேசி இருந்தார் சரத்குமார். இந்த நிலையில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் ராதிகாவை முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கட்டியணைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Post a Comment

0 Comments